மோடிஜி! நமீபியா சீட்டாக்களை விடுங்கள்! இந்த CHEATahhs-க்களை எப்போது பிடிப்பீர்கள்.. பிரகாஷ் ராஜ்
சென்னை: ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை கொண்டு வந்துவீட்டீர்கள், இந்தியாவில் பல கோடிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் இருக்கும் மோசடி மன்னன்களான விஜய் மல்லையா உள்ளிட்டோரை நாடு கடத்துவது எப்போது என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரது 72 ஆவது பிறந்தநாளை பாஜகவினர் அடுத்த 15 நாட்களுக்கு கொண்டாடுகிறார்கள்.
இந்த பிறந்தநாளின் ஒரு நிகழ்வாக ஆப்பிரிக்கா நாட்டின் நமீபியாவிலிருந்து 8 சிவங்கி சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி கூண்டிலிருந்து திறந்துவிட்டார்.

சீட்டாக்கள்
இந்தியாவில் 1952- ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த சிறுத்தை புலி இனம் இல்லை. அதற்கு முன்னதாகவே மன்னர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து பிரத்யேகமாக சிறுத்தை முகப்புடன் கொண்ட விமானத்தில் 8 சிவங்கி சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன.

மோசடியாளர்கள்
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் மூலம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதில் அவர் அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்களே! இந்த சீட்டாக்களை (CHEATahhs) எப்போது இந்தியாவுக்கு நாடு கடத்த போகிறீர்கள் என விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோரின் புகைப்படங்களை போட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் மல்லையா
இந்தியாவில் ரூ 9000 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி
அது போல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13,500 கோடி மோசடி செய்த வழக்கில் மெகுல் சோக்ஷி தேடப்பட்டு வருகிறார். அவர் கடந்த ஆண்டு கரீபியன் தீவான ஆன்டிகுவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அது போல் சோக்ஷியின் மருமகனும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 11000 கோடி ஊழல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மாறுவேடத்தில் சுற்றும் காட்சிகள் வைரலாகின.

பிரகாஷ் ராஜ் காட்டம்
பல கோடிகளை மோசடி செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய இந்த மூவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவது எப்போது என்பதை சீட்டாக்கள் மோசடியாளர்கள் என்ற ஸ்பெல்லிங்கில் பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசின் போக்கை பிரகாஷ் ராஜ் எதிர்த்து வருகிறார். அதிலும் அவரது நண்பர் கவுரி லங்கேஷ் வலது சாரிகளால் கொல்லப்பட்டதை அறிந்த அவரது கோபம் மேலும் அதிகரித்தது. இதனால் அவ்வப்போது மத்திய அரசை #justasking என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி எழுப்புவார்.












Click it and Unblock the Notifications