அநியாயத்தை பாருங்க.. "உங்க புள்ளைக்கு எதுவும் ஆனா கேட்க கூடாது" கையெழுத்து கேட்கும் தனியார் பள்ளிகள்
சென்னை : கோவை தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பெற்றோரிடம் பொறுப்பு துறப்பு படிவத்தில் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போல பள்ளிகள் பெற்றோரை கையெழுத்து இடவேண்டும் என வற்புறுத்துவதாகவும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியம்பூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டம் மாவட்டம் முழுவதும் பரவி பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்ட ரோடு பள்ளி பேருந்துகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாணவி மர்மமரணம்.. பள்ளி நிர்வாகிகள் உள்பட ஐவரிடம் விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு
அதிர்ச்சி சம்பவம்
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்ததோடு, வழக்கு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதிகரிக்கும் தற்கொலைகள்
அதே தினத்தில் அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு கால் மற்றும் விலா எலும்புகளில் கடுமையான முறிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் மட்டும் 7 தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் பள்ளி வளாகங்களில் நடைபெற்றுள்ளது.
பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தல்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தின் போது தனியார் பள்ளி சேதப்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளி கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. மேலும் தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளில் பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு எதுவும் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் கேட்கக் கூடாது என பெற்றோர்களை சில பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தி கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்தது.
பொறுப்பு துறப்பு
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஆர் தாமோதரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பொறுப்பு துறப்பு படிவம் ஒன்றினை வழங்கி கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது. அந்த படிவத்தில் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என அந்த படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் படிவத்தில் கையெழுத்திடாவிட்டால் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
பெற்றோர்கள் அதிர்ச்சி
இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் படிவத்தில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது உண்மைதான் எனவும் ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதே பாணியை பின்பற்றி தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கோவை, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட பள்ளிகளின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது .குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதியே பள்ளிகளுக்கு பெற்றோர்கள் சேர்க்கும் நிலையில் அதற்கு முழு பொறுப்பையும் பள்ளி நிர்வாகத்தினரே ஏற்க வேண்டும்.
கோரிக்கை
ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக அச்சமடைந்த நிர்வாகத்தினர் தற்போது மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது எனவும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இரு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது ஒரு சிலர் இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.