குறிவைக்கும் பிடிஆர்.. சுடசுட தயாராகும் வெள்ளை அறிக்கை.. வெளியாக போகும் 'முக்கிய' உண்மைகள்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பி.டி.ஆரும் ஏற்கனவே கூறியபடி வெள்ளை அறிக்கை' இம்மாதம் வெளியாகப்போகிறது. அதுவும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையில் தமிழகத்தில் எந்த துறையில் எவ்வளவு கடன் சுமை உள்ளது, எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
ஒரு மாநிலத்தின் நிதி நிலையை அப்பட்டமாக பொதுமக்களின் பார்வைக்கு அப்படியே வைப்பது தான் வெள்ளை அறிக்கை. அதாவது நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை. தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் நோக்கம், அதிமுக அரசால் எந்த அளவிற்கு நிதி நிலை மோசமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதுதான்.
அத்துடன் தமிழகத்தின் பட்ஜெட்டில் எந்த அளவிற்கு சலுகைகளை அறிவிக்க முடியும் என்பதையும், மாநில வருவாயை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிய முடியும். அத்துடன் கடன் சுமையை எந்தெந்த வழிகளில் குறைக்க முடியும். எதனால் இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டது, எந்த கடனை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக அறிய 'வெள்ளை அறிக்கை' நிச்சயம் உதவும்.

5 லட்சம் கோடி கடன்
நடப்பு 2021-2022-ம் நிதி ஆண்டின் முடிவில், தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அ.தி.மு.க அரசின் கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்சம் கடனுக்காக, ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாயை தமிழக அரசு வட்டியாகக் கட்டிவருகிறது. மேலும் கடன் சுமை அதிகரிப்பது தமிழகத்திற்கு உண்மையில் சிக்கலான விஷயம் ஆகும். ஏனெனில் 2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, 2020 - 21-ம் நிதியாண்டில் சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஸ்டாலின் விருப்பம்
இந்நிலையில் தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தின் நிதிநிலைமையை புள்ளி விவரத்துடன் விவரித்து கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்போது அமைச்சராகி உள்ள பிடிஆர், மாநிலத்தின் கடன் சுமை, அவர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்ததாக சட்டசபையிலேயே கூறி உள்ளார். இதை மக்களிடம் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று பிடிஆரும், முதல்வர் ஸ்டாலினும் விரும்புகிறார்கள்

நிதி நெருக்கடி
எனவே இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ள வெள்ளை அறிக்கை என்பது, கடன் மற்றும் இதர பிரச்னைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் எக்ஸ்ரே ரிப்போர்ட்' ஆக வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த அறிக்கை பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் முழுமையான நிதி நெருக்கடி என்ன என்பது கடைக்கோடி மக்களும் அறிந்த பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்பது பிடிஆரின் விருப்பமாக இருக்கும் என்று தெரிகிறது.

திமுக மறுப்பு
இந்த வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி, திமுக அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போடப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, அப்படியெல்லாம் திமுக நிச்சயம் செய்யாது என்கிறார்கள். ஏனெனில் ஆட்சிக்கு வந்த உடனேயே 4000 ரூபாய் பணம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு என ஏழை மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான அரசு.

என்ன காரணம்
எனவே வெள்ளை அறிக்கையின் நோக்கம், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழகத்தின் நிதி நிலைமை இதுதான் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க விரும்புகிறது திமுக அரசு. அத்துடன் கடன் சுமையை எந்தெந்த வழிகளில் குறைக்க முடியும். எதனால் இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டது, எந்த கடனை குறைக்க என்ன செய்ய வேண்டும் வருவாயை அதிகரிக்க உள்ள வழிகள் அத்தனையும் வெள்ளை அறிக்கையால் வெளிப்படையாக தெரியவரும். எனவே தான் வெள்ளை அறிக்கை வெளியிட பிடிஆரும், முதல்வரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications