சென்னையில் விடிய விடிய மழை.. மட மடவெட உயரும் அணைகளின் நீர்மட்டம்.. அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவா?
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதார ஏரிகளான புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.
சற்று தாமதமாக இந்த ஆண்டு பருவமழை தொடங்கினாலும் ஆரம்ப நாட்களிலேயே சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

சென்னையில் விடிய விடிய மழை
பருவமழை தொடங்கிய 3ம் நாளான நேற்று காலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டமாகவும் காணப்பட்டது. இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று சென்னை பகல் நேரத்திலும் குளிர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் கனமழை பெய்யத்தொடங்கியது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஒரே நாளில் 10 செ.மீ மழை
தொடர்ந்து விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னையில் பல்வெறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு பகுதிகளில் தண்னீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வில்லிவாக்கத்திலும் மிக கனமழை பெய்தது. இங்கு மட்டும் ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவானது.

புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
இவ்வாறு பரவலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ததால் முக்கிய அணைகளான புழல் ஏரி, கண்ணன்கோட்டை மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கன அடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் புழல் ஏரியில் நீர் இருப்பு 2536 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

சோழவரம் அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு
புழல் ஏரியின் மொத்த நீர் இருப்பு கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சோழவரம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தானது வினாடிக்கு 66 கன அடி அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மடமடவென உயர்ந்து வருகிறது. கண்ணன்கோட்டை ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மேலும் 4 நாட்களுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications