வேலையைக் காட்டும் மாண்டஸ் புயல்! அடுத்த 3 மணி நேரம்தான் ரொம்ப முக்கியம்! இத்தனை மாவட்டங்களில் மழையா?
சென்னை : தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் என பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியது. வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் பின்னர் புயலாக மாறியது.
மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை சூறாவளி புயலாக மாறும் எனவும் அதனைத் தொடர்ந்து மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பட்டது.
கடுமையான சூறாவளி அவதாரம் எடுத்த மாண்டஸ்! கொட்டித் தீர்க்கும் கனமழை! இத்தனை மாவட்டங்களில் விடுமுறையா?
கடுமையான சூறாவளி புயல்
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், நாளை முற்பகல் வேளையில் படிப்படியாக வலுவிழந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
விடுமுறை
கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை21 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரண்மாக 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை
இந்நிலையில் வங்க கடலில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிகப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கையால் சாலையில் தண்ணீர் தேங்குவது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.