குடியரசு தின வரவேற்பு: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் தமிழ்நாடு, திருவள்ளுவர் ஆண்டு!
சென்னை: குடியரசு தின வரவேற்பு விழாவுக்கான தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் தமிழ்நாடு பெயரும் திருவள்ளுவர் ஆண்டும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பது சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறவில்லை; தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என இடம்பெற்றிருந்தது. வழக்கமாக தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை கொள்வதோ மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், , தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது, ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்த இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பை நடத்துவது மகிழ்ச்சி தருகிறது. பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம் குறித்த குறுகிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் ஐபிஎஸ் பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன். தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்த போது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம் நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்கள், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை கோயில் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என கூறுவீர்கள். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது எனவும் பேசியிருந்தார்.
தற்போது தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் தமிழ்நாடு பெயர், தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

இதனை மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் வரவேற்றுள்ளார். இந்து ராம் தமது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் தமிழ்நாடு பெயர், தமிழ்நாடு இலச்சினை இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications