"பணம் வசூல்" பண்ணாதீங்க.. போராடி நோகடிக்காதீங்க.. ரஜினி மக்கள் மன்றம் திடீர் அறிக்கை
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்றும், இதற்கான செலவுகளை சொல்லி நிதி வசூல் செய்யக்கூடாது என்றும், தலைமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், டிசம்பர் 31-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் டிசம்பர் 3ஆம் தேதி ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார்.
ஆனால் டிசம்பர் கடைசி வாரத்தில் திடீரென அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். உடல்நலப் பிரச்சினை இருப்பதை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
பரவும் பறவைக் காய்ச்சல்.. கேரளா, ஹரியானா விரையும் வைராலஜி நிபுணர் குழு! டெல்லியில் கட்டுப்பாட்டு அறை
போராட்டங்கள்
இந்த நிலையில் தான், ஏமாந்து போன ரசிகர்கள் பலரும், ரஜினிகாந்த்தை, அரசியலுக்கு வர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதை பெரிய அளவில் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த சில ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.ரஜினி தனது அரசியல் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென ஜனவரி 10ம் தேதி ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில்தான், ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற போராட்டங்கள் கூடாது என்றும், நிதி வசூலிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வெளிப்படையான அறிக்கை
சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினி ரசிகர் மன்றத்துக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் வணக்கம். நமது தலைவர் (ரஜினி) தன்னுடைய உடல்நிலை குறித்தும், தன்னுடைய மருத்துவர்கள் ஆலோசனையையும் மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தையும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்தும், வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றை கொடுத்தார்.
ரஜினியை நோகச் செய்யும்
அதன் பின்னரும், அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, அதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகச் செய்யும் செயல். இந்த போராட்டத்திற்காக ஒரு சிலர், செலவுகளுக்காக என்று கூறி நிதி வசூல் செய்வதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது. நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று, தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் செலவு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அறிவித்ததும், பூத் மட்டத்தில் ஆட்களை நியமிப்பது, போஸ்டர் ஒட்டுவது, மக்களை சந்திப்பது என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கை காசுகளை போட்டு செலவு செய்தனர். ஆனால், ரஜினிகாந்த் அவர் சொன்ன சொல்லை மாற்றிக்கொண்டு திடீரென அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால், ரசிகர்களில் பலர் கடன்காரர்களாக மாறி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் போராட்டம் நடத்துவதற்காக ரசிகர்கள் சிலர் நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது.