இந்திய எல்லையில் பரபர.. உள்ளே புகுந்த இலங்கை படை! 12 மீனவர்கள் கைது - ஆக்ஷன் எடுக்குமா மத்திய அரசு?
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியுள்ளார்.
இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும் என்று தெரிவித்து இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரி உள்ளார்.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே வங்கக்கடலில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ராஜ்குமாருக்கு சொந்தமான படகில் ராஜ்குமார் உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 18 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல்- இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
தமிழ் மீனவர்கள் கைது
இந்த நிலையில் நேற்று கோடியக்கரையிலிருந்து தென்கிழக்கே இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி வந்த இலங்கை கடற்படை வீரர்கள், 12 மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய விசைப் படகையும் சிறைபிடித்தனர்.
வாடிக்கையாகும் அத்துமீறல்
மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை இலங்கையின் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற அந்நாட்டு கடற்படையினர், விசாரணை செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது வாடிக்கையாகி இருக்கிறது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ராமதாஸ் கண்டனம்
இந்த நிலையில் இலங்கை கடற்படையின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது.
25 நாட்களுக்கு பின் அத்துமீறல்
அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி இதுவரை கைதான அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கவலை தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர்
அதனால், மீனவர் சமுதாயம் நிம்மதி அடைந்த நிலையில் தான் அடுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். இதனால் பயன் ஏற்படாது.
மத்திய அரசு கண்டிக்க வேண்டும்
இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும். இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.