கடும் நெருக்கடி.. ஆக்ஷன்... சாத்தான்குளத்துக்கு புது டிஎஸ்பி.. கூண்டோடு உயர் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல் உயர்நீதிமன்றத்தால் இடமாற்ற நடவடிக்கைக்கு உள்ளான தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி
இதனிடையே கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தூத்துக்குடி எஸ்பியையும் இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இதன்படி தூத்துக்குடி எஸ்பியாக பணியாற்றிய அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பியாக பதவியேற்க உள்ளார்.

ஹைகோர்ட் அதிரடி
சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, தூத்துக்குடி காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்ததாக உயர்நீதிமன்றமே கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அத்துடன் சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை உத்தரவிட்டது.

நீதிபதி குறித்து விமர்சனம்
இதையடுத்தே சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குச் சென்ற மாஜிஸ்திரேட்டைப் பார்த்து உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா என்று ஒரு கான்ஸ்டபிள் ஏக வசனத்தில் பேசிய காவலர் மாகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தால் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருடன் பாணியாற்றி ரகு கணேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்ஐக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு பதிய உத்தரவு
இதனிடையே இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு
மேலும், இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட வீணாகமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவால் சாத்தான்குளம் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications