மக்களே.. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா? சென்னையில் 10ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்
சென்னை: ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான பொதுமக்கள் குறைதீர் முகாம், சென்னையில், வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரசு நியாய விலைகடைகளில் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கும் மட்டும் இல்லாமல், ஒவ்வொருவரின் முகவரிக்கு ஆதாரமாகவும் ரேஷன் கார்டு இருந்து வருகிறது. மேலும், குடும்ப அட்டை மூலம், தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் நேரடியாக பெறவும் முடியும். இதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் அட்டை முக்கியமாக கருதப்படுகிறது.
வேற மாதிரி பதிலடி.. ரேஷன் கடையில் மோடி படம் கேட்ட நிர்மலா.. சிலிண்டரில் ஒட்டி விலையை எழுதிய டிஆர்எஸ்
சென்னையில் 10-ம் தேதி முகாம்
குடும்ப அட்டைதாரர்கள், சிலர் தங்களது ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்யவும், புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிய ரேஷன் அட்டை பெறும் வகையிலும் தமிழக அரசு அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில், வரும் 10-ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம், சென்னையில் உள்ளிட்ட19 மண்டங்களில் நடைபெறவுள்ளது.
19 மண்டலங்களில் குறைதீர் முகாம்
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 10-ம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சான்று
இந்த மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை குடும்ப அட்டை கோரும் நகல் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் இந்த முகாமில் வழங்கப்படும்.
புகார் தெரிவிக்க வசதி
மேலும், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.