இனி குழாயடி சண்டை, கூச்சல் குழப்பம் இருக்காது.. ரேஷன் பொருள் வீடுதேடி வரும்.. அதிமுக தேர்தல் அறிக்கை
சென்னை: இனி அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டியது இல்லை. தானாக வீடு தரும் வரும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கெரசின், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத்திலும் அரிசி இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நிதியுதவியும் வழங்கப்படுகிறது. ரேஷன் புக்குகளாக இருந்த காலம் போய் தற்போது ஏடிஎம் கார்டு போல் ஸ்மார்ட் கார்டுகளாக வந்துவிட்டது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 2.06 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் மாதம் பிறந்தவுடன் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்குவர். அவ்வாறு செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.
ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என கால் கடுக்க வரிசையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்குகிறார்கள். கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்பதால் பலர் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
அம்மா இல்லம் முதல் வாஷிங்மெசின் வரை.. வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை.. அசத்தல் வாக்குறுதிகள்
காய்கறி, மளிகை சாமான் போல் ரேஷன் பொருட்களையும் டோர் டெலிவரி செய்தால் எப்படி இருக்கும் என நினைக்க தோன்றும். சிலருக்கு ரேஷன் கடைகள் மிகவும் தூரத்தில் இருக்கும். பொருட்களை தலையிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு வீடு போய் சேர்வதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது.
இந்த நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. அதில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய போது விஜயகாந்தின் தேர்தல் அறிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.