ஓபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் உதயகுமார்.. "தேனியே திணறனும்.." பக்கா ஸ்கெட்ச்!
சென்னை : ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டத்தில் முதன்முறையாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பானது ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஓபிஎஸ்க்கு அடுத்து முக்குலத்தோர் சமுதாயம் சார்பாக தான் அதிமுகவில் இருக்கிறேன் என்பதை தலைமைக்கு நிரூபிக்க தேனி மாவட்டத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25ஆம் தேதியான இன்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்,
அதன்படி அதிமுக சார்பில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இதேபோல் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ள கன்னியாகுமரி, தேனி, திருச்சி (வெல்லமண்டி நடராஜன்) உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. மற்ற அதிமுக மாவட்ட அமைப்பு மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் பிரம்மாண்டமாக நடத்த வேண்டுமென மறைமுக உத்தரவிடப்பட்டுள்ளதால் அதற்கேற்றார் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்.பி.உதயகுமார்
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர், கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டவற்றில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. காரணம் அவர் மட்டுமல்லாது மாவட்ட செயலாளரான சையதுகானும் ஓபிஎஸ் தரப்பிலேயே உள்ளார். அதனால் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. ஆனால் நாளை தேனியில் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக களமிறக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் தற்போது எதிர்கட்சி துணை தலைவர் என இபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.பி.உதயகுமார்.

தேனியில் நாளை ஆர்ப்பாட்டம்
தற்போது தேனிக்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் மதுரை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஏன் ஓ.பன்னீர் செல்வத்தின் முன்னாள் தீவிர ஆதரவாளருமான ஆர்பி உதயகுமார் பொறுப்பேற்று இருப்பது தேனி மதுரை மாவட்ட அதிமுகவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும் ஜெயலலிதா காலத்தில் இருந்து ஒன்றாக பயணித்தவர்கள் என்பதாலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ஆர்பி உதயகுமார் மிக நெருக்கமாகவே இருந்து வந்தார். ஆனால் தர்மயுத்தத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்தாலும் மறைமுகமாக ஓபிஸ்க்கு ஆர்.பி.உதயகுமார் ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்
பெரியகுளத்தில் இருந்தாலும் கைலாசபட்டி பண்ணை வீட்டில் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிக்கடி சந்திப்பவர் ஆர்பி உதயகுமார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஓபிஎஸ் எடப்பாடி என மாறிமாறி பயணித்தவர் தற்போது எடப்பாடி முகாமிலேயே தங்கி உள்ளார். அதற்கு பரிசாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் தான் தேனியில் குறிப்பாக ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டத்தில் முதன்முறையாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பானது ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஓபிஎஸ்க்கு அடுத்து முக்குலத்தோர் சமுதாயம் சார்பாக தான் அதிமுகவில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள தேனி மாவட்டத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார் ஆர்.பி.உ.

ஆட்களை திரட்ட ஏற்பாடு
தேனி மாவட்டத்தில் முக்கிய அதிமுக நிர்வாகிகளான ஜக்கையன் ,கிருஷ்ணகுமார், முருக்கோட்டை ராமர் உள்ளிட்டோரை அழைத்து பேசியுள்ள ஆர்.பி.உதயகுமார் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை ஆட்களை திரட்டி ஓபிஎஸ்-க்கு போட்டி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பதவியை பெற ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ள தேனி நிர்வாகிகள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஆட்களை திரட்டி வர ஏற்பாடு செய்துள்ளனர்.

மெகா திட்டம்
குறைந்தபட்சம் 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் நபர்களை திரட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தாலும் அது சாத்தியமில்லை. அதே நேரத்தில் தங்களால் முடிந்த அளவு கூட்டத்தைக் கூட்டி பிரம்மாண்டம் காட்ட காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளுடைய ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதாவது கூட்டம் நடக்கும் போது ஆட்களை உள்ளூர் நிர்வாகிகள் அழைத்து வரக்கூடாது என்று மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் பேசி வருவதாக கூறப்படுகிறது இந்த தகவல் ஆர்.பி உதயகுமாருக்கு சென்றிருப்பதால் மதுரையில் இருந்தாவது ஆட்களை அழைத்து வந்து தேனி ஆர்ப்பாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications