முழு ஊரடங்கால் வெறிச்சோடிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை.. ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை இல்லை
சென்னை: நேற்று முழு ஊரடங்கு என்பதால், கடந்த 6 நாட்களாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டு வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆள் அரவமின்று வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கால் 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்படவில்லை
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர்' மருந்து அதிகளவில் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. இப்போது தான் அரசு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் இருப்பில் இருந்த ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது அதிகரித்தது.

இதனை தடுக்கும் விதமாக தமிழக மருத்துவ பணிகள் கழகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை தொடங்கிய நாள் முதலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால், கடந்த 6 நாட்களாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டு வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆள் அரவமின்று வெறிச்சோடி காணப்பட்டது.
மருந்து விற்பனை தொடங்கி நாள் முதலே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வாசலில் காலே முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். ஆனால் நேற்று முழு ஊரடங்கு மற்றும் வாக்கு எண்ணிக்கை என்பதால், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்படவில்லை. இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.
முழு ஊரடங்கில் மருந்து,மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி உள்ளது. இந்த சூழலில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று நடைபெறவில்லை. நோயாளிகளின் நலன் கருதி ஊரடங்கு நேரத்திலும் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை அங்கு வந்தவர்கள் வைத்தனர்.












Click it and Unblock the Notifications