தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை.. ஓபிசி கிரீமிலேயரை நீக்குங்கள்.. தமிழ்நாடு அரசு
சென்னை: அரசுத் துறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டைப் போலவே தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், க்ரீமி லேயர் கொள்கையையும் நீக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பட்ஜெட்டிற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்களுக்குக் மிதமான மழை - இதமான செய்தி சொன்ன வானிலை
பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் துறை ரீதியில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடர்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அதன்படி இன்று ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்று சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் க்ரீமி லேயர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
கொள்கை விளக்கக் குறிப்பு
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அகில இந்திய அளவில் மத்திய அரசு நிறுவனங்களில் ஓபிசி எனப்படும் இத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டில் ஆண்டு வருமானத்தை அடிப்படையாக கொண்ட கிரீமி லேயர் என்ற முறை பின்பற்றப்படுகிறது. இந்த கிரீமி லேயர் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது.
க்ரீமி லேயர் பிரிவை நீங்குங்கள்
தந்தை பெரியார், அண்ணா, நேரு, அண்ணல் அப்பேத்கர் ஆகிய தலைவர்கள் வலியுறுத்தி வந்ததை போல பொருளாதார நிலை ஒரு அளவுகோலாகக் கருதாமல், சமூகத்தில் இருக்கும் நிலையை மட்டும் கருதி அனைத்து பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கிரீமி லேயரை பிரிவினரை நீக்கம் செய்யாமல் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு
அதேபோல தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்து கொள்கை விளக்கக் குறிப்பில் கூறுகையில், "மத்திய மாநில அரசுத் துறைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் போலவே தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்குத் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகின்றன. எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு
இந்தியா அரசியலமைப்பு சட்டப்படி சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என மொத்தம் 69% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கடந்த 2019 ஜனவரி மாதம் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.