Rewind 2020: காதலித்து கர்ப்பமானதை கண்டித்த அக்காள்.. தலையணையால் அழுத்தி கொன்ற 17 வயது தங்கை
சென்னை: காதல் விவகாரத்தால் அக்காவை தலையணையால் தங்கை அழுத்தியே கொன்ற சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது அந்த மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளான டாப் 10இல் இடம்பெற்றுள்ளது.
2021 புதுவருடம் வர பிறக்க உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.
1. திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற முதல் திருநங்கை ரியா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
2. பட்டியலின மாணவனை, மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு நாமக்கல் நீதிமன்றம் 5 வருட சிறை. தண்டனை விதித்தது
நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியைச் சேர்ந்த விஜயலட்சுமி ராமாபுரம்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் டீச்சராக பணியாற்றிய போது 3-ஆம் வகுப்பு மாணவன், தன்னை அறியாமலேயே வகுப்பறையில் மலம் கழிக்க 2-ம் வகுப்பு பட்டியலின மாணவனை கூப்பிட்டு, அந்த மலத்தை அள்ளி வெளியே போட சொல்லியுள்ளார். இது தொடர்பான வழக்கில் விஜயலட்சுமிக்கு, 7 வருட ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
3. ஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ்... 4 கிராம் தங்ககாசு பரிசு... நாமக்கல் மாவட்ட திமுக
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் தொண்டர்களுக்கு 4 கிராம் தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவித்தார். இது மட்டுமல்லாமல் கிளைக்கழக நிர்வாகிகள் மரணமடைந்தால் அவர்களின் இறுதிச்சடங்குக்கு தேவையான நிதியை ஒன்றியச் செயலாளர்கள் தர வேண்டும் என்றும் தெரிவித்தது அப்பகுதி திமுகவினரை உற்சாகப்படுத்தியது
4. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிவு
முட்டை பண்ணைக்குப் பெயர் போனது நாமக்கல் மாவட்டம். இங்கு ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்தவுடன் கோழிக் கறி, முட்டை சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவுவதாக தவறான தகவல் பரவியது இதனால் முட்டையின் விலையும் சரிந்து விட்டது. நாமக்கல்லில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ 1.65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது
5. காதல் விவகாரம் ,அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை
நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் இளைஞரை காதலித்ததுடன் கர்ப்பமும் அடைந்துள்ளார் 17 வயது தங்கை.. இதை அக்கா மோனிஷா கண்டிக்கவும், ஆத்திரம் தாங்காமல் காதலனுடன் சேர்ந்து மோனிஷாவை தலைகாணியால் அழுத்தியே கொன்றுள்ளார் தங்கை! இச்சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அப்பகுதியில் விலகவில்லை!
6. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ என பயந்து போன தோழிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தோழிகள் ஜோதி, பிரியா இருவரும் மிக நெருக்கமாக பழகியுள்ளனர்.பிரியாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால் இருவரும் பிரிந்துவிடுவோம் என அஞ்சி இருவரும் ஒரே சேலையில் தற்கொலை செய்துக்கொண்டனர்.இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
7. நீட் தேர்வு அச்சம் , மாணவர் தற்கொலை
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் போல் வேறு யாரும் நீட்டுக்கு பலியாக கூடாது என்றும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் மாணவனின் தந்தை தாய் கதறினர்.
8. இது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா... அதிகாரிகளை கேள்விகளால் திணறவைத்த நாமக்கல் MP சின்ராஜ்
நாமக்கல் மாவட்டம் பவித்திரம் என்ற ஊரில் அரசுப் பள்ளிச் சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்படுவதை நேரில் கண்டறிந்த சின்ராஜ் எம்.பி அதிகாரிகளையும், ஒப்பந்ததாரையும் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். செங்கல் வைத்து பூசப்பட்டிருந்த சுவற்றை தனது கையால் தள்ளினார். செங்கற்கள் பெயர்ந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா எனவும் திட்டித்தீர்த்தார்,எம்.பியின் நடவடிக்கையால் வெள வெளத்து போனார்கள் அதிகாரிகள்
9. ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" அமைச்சர் சரோஜா பேசிய பஞ்ச் வசனங்கள்
நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்... முடியாததை முடியும்னு சொல்ல மாட்டேன்.. ஏன்னா, முடியாதது என்று எதுவுமே இல்லை.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" அமைச்சர் சரோஜா பேசிய பஞ்ச் வசனங்களை கேட்டு ராசிபுரம் மக்கள் திக்குமுக்காடிப் போய்விட்டனர்.
10. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவராக வலம் வந்த போலி டாக்டர்
நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவராகப் வலம் வந்துள்ளார்.இது தொடர்பாக எம்.பிசின்னராஜுக்கு தெரியவர உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு புகார் அளித்தார் . அவரின் புகாரை கொண்டு விசாரணை நடைபெற்றத்தில் தங்கராஜ் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவராக வலம் வந்தது தெரியவந்தது .இதனை அடுத்து போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவரை கையும் களவுமாக பிடித்து கொடுத்த எம்பிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இது தான் மக்களே 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் . நீங்களும் நாமக்கல்லில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமெண்ட் செய்யுங்கள்.