ரூ.10 மீண்டும்? அதே 10 ரூபாய் நாணயங்கள்.. பொள்ளாச்சியை அசத்திய ரூ. 10 வேட்பாளர்.. பலே பகுஜன் சமாஜ்
சென்னை: தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர், பொள்ளாச்சியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.. என்ன காரணம்?
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பு மனுக்களும் தாக்கலாகி வருகின்றன.. இந்த வேட்பு மனு தாக்கல், நாளையுடன் முடிவடைகிறது.. ஆரம்பத்தில் பிரதான கட்சி வேட்பாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் முதல் நாளில் வெறும் 22 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள்..

வேட்பு மனு தாக்கல்: ஆனால் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுகவினர் உட்பட மொத்தம் 405 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்களாம். அதேபோல, பல்வேறு வேட்பாளர்கள் நூதன முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து அசத்தி வருகிறார்கள்..
இப்படித்தான், திருச்சியில் உறையூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. வெறும் ஆதார் அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டு, வந்து கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆதார் கார்டு: டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் இப்படி எல்லா கார்டுகளையும் கழுத்தில் மாலையாக அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கயிறு கட்டிய வேட்பாளர்: அதுபோலவே, மதுரையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் என்பவர், ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூக்கு கயிறை கழுத்தில் தொங்கவிட்டபடியே வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார்..
ஆனால், 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே போலீசார் அவரிடம் இருந்த கயிறு, பதாகைகளை பறிமுதல் செய்து, அவரை முழுவதுமாக சோதனை செய்து, அதற்கு பிறகே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.
பெஞ்சமின்: அதுபோலவே, பொள்ளாச்சி தொகுதியில் ஒருவர், வேட்பு மனு தாக்கல் செய்து மொத்த பேரையும் கிறுகிறுக்க செய்துள்ளார்.. இந்த வேட்பாளர் பெயர் பெஞ்சமின் பிரபாகர்.. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தையும், வெறும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார்.
இதற்கு பெஞ்சமின் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இப்போதெல்லாம் 10 ரூபாய் நாணயங்களை யாருமே வாங்குவதில்லையாம்.. ரிசர்வ் வங்கி பலமுறை சொல்லியும்கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரர்கள் மறுக்கிறார்களாம். அதனால், இந்த நாணயங்களை அனைவரும் வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களுடன் வந்ததாக சொன்னார்.
நாணய மூட்டைகள்: மொத்தம் 25 ஆயிரம் ரூபாய்க்கும், 10 ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்து கொடுத்த நிலையில், சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அந்த நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவ்வளவு நாணயங்களையும் எப்போது எண்ணி முடித்தார்களோ, தெரியவில்லை...!!












Click it and Unblock the Notifications