தனியார் பள்ளியில் 2வது நாளாக ஆர்எஸ்எஸ் கூட்டம்.. ‘பாஜக மேட்டர்’ பற்றி ஆலோசனை.. லீடர்கள் பங்கேற்பு!
சென்னை : சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்களை பள்ளிகளில் நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று இரண்டாவது நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்புகள் ஒன்றிணைந்து வளர்ச்சி பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மந்திரியாக, முதல்வராக உதயநிதி அண்ணா வரவேண்டும்...சீனியர் அமைச்சர் மருமகள் ஓபன் டாக்!
சமன்வய பைட்டக்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் வழிகாட்டுதலில் இயங்கும் சங் பரிவார் அமைப்புகள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி செயல் திட்டங்களை வகுப்பது வழக்கம். இது 'சமன்வய பைட்டக்' என அழைக்கப்படும். இந்தக் கூட்டத்தை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்பும் கடந்த ஓராண்டில் செய்த பணிகளை ஆய்வு செய்து, அடுத்த ஓராண்டிற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றும், இன்றும் ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு தடை
பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்களை பள்ளிகளில் நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளிலும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இரண்டாவது நாளாக இன்றும்
இந்நிலையில் தான் தற்போது சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய ஆலோசனை
இந்த சங் பரிவார் ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்தது, பொது இடங்களில் கூட்டங்களை நடத்த விடாமல் அளிக்கப்படும் நெருக்கடிகள், அரசுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக விவகாரங்கள்
மேலும், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்களால் கட்சிக்குள் நிலவி வரும் குழப்பங்கள் பற்றியும், 2024ல் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் பற்றியும் இந்த சங் பரிவார் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.