பிறந்தநாள் பரிசு.... தொண்டர்களுக்கு சசிகலா வெளியிட்ட வீடியோ - திடீர் அமைதிக்குக் காரணம் என்ன
பிறந்தநாளில் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்று சசிகலா வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: பிறந்தநாளில் என்னை காண நேரில் வர வேண்டாம் என்று சசிகலா வீடியோ வெளியிட்டுள்ளார். அவரவர் இருக்கும் இடங்களில் இருந்து கொண்டே ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் நாட்டு மக்கள் நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
ஆகஸ்ட் 18ஆம் தேதி நாளைய தினம் சசிகலாவின் 67ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த வரைக்கும் பெரிய அளவில் பிறந்தநாளை சசிகலா கொண்டாடியதில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா சிறை சென்ற பின்னர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ட்விட்டரில் HBDChinnama என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.
சிறை தண்டனை முடிந்து சசிகலா தற்போது வீட்டிற்கு வந்திருப்பதால் இந்த ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது பிறந்தநாளில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்வார் என்றும் அதிமுகவின் அலுவலகத்திற்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறந்தநாளில் தன்னை காண யாரும் வர வேண்டாம் என்று சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆடியோ அரசியல்
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்து விட்டு ஆன்மீக பயணம் சென்றார். தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று எதிரிகளை வெல்ல யாகம் நடத்தினார் சசிகலா.
சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னர் ஆடியோ அரசியலை ஆரம்பித்தார் சசிகலா.

சசிகலா பேட்டி
திரும்ப வருவேன் என்றும் அதிமுகவை கைப்பற்றப் போகிறேன் என சசிகலா ஆடியோ மூலம் வெளிப்படுத்திவந்தார். சசிகலா உடன் பேசிய அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா. தனக்கும் அதிமுகவுக்குமான நெருக்கம், ஜெயலலிதா உடனான நட்பு என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சசிகலா.

சுற்றுப்பயணம் தள்ளி வைப்பு
கடந்த சில வாரங்களாக ஆடியோ, வீடியோ எதையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தார் சசிகலா.
சிறையிலிருந்து சென்னை வந்து ஆறு மாதங்களாகியும் சசிகலா இன்னும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்ட சசிகலா ஜெ நினைவிடத்திலிருந்து அதை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. கொரோனா காலமாக இருப்பதால் அந்த திட்டத்தை சசிகலா தள்ளி போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா மவுனம்
ஜூலை 26ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்று மோடி, அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பினர். சசிகலாவை ஒருபோதும் கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறினார் ஓபிஎஸ். இதன் பின்னர் சசிகலாவின் ஆடியோ உரையாடல் வெளியாகவில்லை. சசிகலா வீடியோ வெளியிடப்போவதாகவும் அது அதிமுக தலைவர்களை ஆட்டம் காண வைக்கும் என்றும் பரபரப்பு வெளியானது ஆனால் திடீரென மவுனமாகி விட்டார் சசிகலா.

தொண்டர்களுடன் சந்திப்பு
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை பெற்று வந்த வீடியோவை சசிகலா வெளியிடப்போவதாக கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பார் சசிகலா என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுபோல எதுவும் நடக்காமல் போய்விட்டது. ஆடியோ, பேட்டி என தினசரியும் பரபரப்பான செயல்பட்டு வந்த சசிகலாவின் திடீர் மவுனமாகி விட்டார். இந்த மவுனத்திற்குக் காரணம் பெங்களூரு சிறையில் இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் பற்றிய விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதே காரணம் என்று தெரிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
67வது பிறந்த நாளில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அரசியல் பயணத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் சசிகலாவின் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வதை சசிகலா தவிர்த்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

ஏழைகளுக்கு உதவி
பிறந்த நாளில் தன்னை காண நேரில் வர வேண்டாம் என்றும் அவரவர் இருந்த இடத்தில் இருந்தே ஏழைகளுக்கு தங்களால் இயன்ற உதவி செய்வதும் நாட்டு மக்கள் நலம் பெற பிராத்தனை செய்வதுமே தனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகும் என்று இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் சசிகலா. தனது பிறந்த நாளில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் சசிகலா.












Click it and Unblock the Notifications