ஜெ.தீபாவின் தாயார் ஜெயலலிதாவுக்கு எதிரான 'அரண்மனை' சதி.. ஆறுமுகசாமி ஆணையத்தில் விவரித்த சசிகலா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி (ஜெ.தீபாவின் தாயார்), யார் யாருடன் சேர்ந்து எப்படியெல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தார் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விவரித்துள்ளார் சசிகலா.
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமானது சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.
இந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ. தீபாவின் குடும்பத்தினர் பற்றி சசிகலா அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா காழ்ப்புணர்வோடு என் மீது பொய்யான விவரங்களை இந்த ஆணையத்தில் கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டு அனைத்தும் எவ்விதமான அடிப்படை ஆதாரமும் இன்றி ஐயத்தின் பால் சுமத்தப்பட்டுள்ளது.

ஜெ. தீபாவின் தாயாரின் சதி
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டம் வரையில் ஜெ.தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை. அதற்கு காரணம் ஜெ.தீபா, அவரது தாயாரைப் போலவே நடந்து கொள்கிறார் என ஜெயலலிதா பலமுறை என்னிடம் சொல்லியது உண்டு. ஜெ.தீபாவின் தாயார் ஜெ.விஜயலட்சுமி, பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது, ஜெயலலிதாவின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு தேவை என பொய்ப் புகார் கொடுத்தார்.

கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி
அதேபோல கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டார். விஜயலட்சுமி போன்றே குணநலன்களை ஜெ.தீபாவும் கொண்டிருக்கிறார் என்பதே ஜெயலலிதாவின் எண்ணம். அதனால்தான் ஜெ.தீபாவிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்து வந்தார். ஆனால் அதற்கு காரணம் நான் என எண்ணிக்கைக் கொன்டு ஜெ.தீபா காழ்ப்புணர்வு கொண்டு இருந்திருக்கிறார். அதனால் என் மீது ஜெ.தீபா பொய் குற்றச்சாட்டுகளை இந்த ஆணையத்தில் அடுக்கி உள்ளார்.

ஜெ.தீபக்
ஆனால் ஜெ.தீபக், அப்பா ஜெயக்குமாரை போன்றவர் என ஜெயலலிதா அடிக்கடி என்னிடம் கூறுவார். ஜெ.தீபக், ஜெயலலிதாவிடம் எப்போதும் அணுசரனையாக நடந்து கொள்வார். நான் சிறையில் இருப்பதால் சத்யபிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்ட பெயர்கள், தேதிகள், ஞாபக்சதி திறனை கொண்டு உத்தேசமாக தயாரிக்கப்பட்டது. சிலரது பெயர்கள், விவரங்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

சிபிஐ விசாரிக்க கோரும் தீபா
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த ஜெ.தீபா, ஜெயலலிதாவுக்கு சசிகலா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதாவின் மரணம், இயற்கையானதா என்பதிலேயே சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி எல்லாம் விசாரிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு பெரிய நோய் பாதிப்பு இல்லை. வயதின் காரணமாக இருக்கும் சாதாரண பிரச்சனை தான் இருந்திருக்கிறது. இதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications