டக்குனு ஓகே சொன்ன சசிகலா.. நாடிவரும் "தலை"கள்.. இன்று முக்கிய அறிவிப்பு.. திடீரென தினகரன் போட்ட தடை?
எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தர உள்ளாராம் சசிகலா
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள், இன்று விமர்சையாக அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
எனவே, எம்ஜிஆர் பிறந்த நாளில் சசிகலா வெளியே வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. ஆனால், கொரோனா கெடுபிடிகள் இருப்பதால், எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியே வருவதை தவிர்க்க நினைத்திருந்தார் சசிகலா...
சரியாக நேரம் பார்த்து.. எம்ஜிஆர் இல்லத்திற்கு வரும் சசிகலா.. முக்கிய விஐபியை சந்திக்க பிளான்?
சம்மதம்
அதுமட்டுமல்ல, வெளியில் வரமாட்டேன் என்றும் கூட தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வந்தன. எனினும், அவரது நிர்வாகிகள் இதை ஏற்கவில்லை போலும், அதிமுக தலைவர்கள், கட்சி அலுவலகத்துக்கு செல்லவிருப்பதால், "எம்ஜிஆர் பிறந்தநாளில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தால் கழக தொண்டர்களிடம் ஒருவித சோர்வு வந்துவிடும்... ஓபிஎஸ்சுக்கும் இபிஎஸ்சுக்கும் நீங்கள் கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும்.. அதனால் நீங்கள் வெளியே வரணும்" என்ற வேண்டுகோளை முன்வைக்க, அதற்கு சசிகலாவும் ஓகே சொல்லி இருந்தார்.
மரியாதை
எனவே, இன்று, தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு காலை 10 மணிக்கு, சசிகலா வந்தார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.. அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் - ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்... பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.. முன்னதாக, "மீண்டும் இணைவோம் - உறுதி ஏற்போம்" என்ற வாசகத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சசிகலாவை வரவேற்கும் ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.. இதனிடையே, சசிகலா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அமமுகவினர் பங்கேற்க தினகரன் தரப்பில் தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் பரபரத்தன.
அலுவலகம்
மேலும், அமமுக பொதுச் செயலர் தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக முதலில் கூறப்பட்டது... ஆனால், கொரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் அவர் இருக்கிறார்... எனவே, அங்கேயே எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாக அமமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
என்ன காரணம்?
அதேசமயம், தினகரன் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் செந்தமிழன் தலைமையில், சென்னையில் கட்சி அலுவலகத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டால், சசிகலா நிகழ்ச்சிக்கு யாரும் போகாமல் தடுக்கவே இப்படி ஒரு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.. ஏற்கனவே இப்படித்தான், சசிகலா பங்கேற்கும் சென்னை வெள்ள நிவாரண நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க கூடாது என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு தினகரன் உத்தரவிட்டதாக கூறப்பட்டன..
உத்தரவு
இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து கடிந்து கொண்டதாகவும், கண்டித்து அனுப்பியதாகவும்கூட செய்திகள் வந்தன.. இப்போதும் அதுபோலவே, ஒரு கட்டுப்பாட்டினை நிர்வாகிகளுக்கு தினகரன் விதித்துள்ளதாக தெரிகிறது.. எனினும் இந்த நிகழ்ச்சியில் சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.. அல்லது சில முக்கிய தலைவர்கள் சசிகலாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. ஆக, எம்ஜிஆர் பிறந்த நாளை அதிமுக தனியாக கொண்டாடி வருகிறது.. அமமுக தனியாக கொண்டாடி வருகிறது.. சசிகலா தனியாக கொண்டாடுகிறார்..!