வண்டிய திருப்பு.. சின்னம்மா கட்சி ஆபிசுக்கு கிளம்பிட்டீங்களா? பற்ற வைத்த சசிகலா! பதட்டத்தில் இபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடை சூழ நிச்சயம் செல்வேன் என சசிகலா கூறி இருப்பது எடப்பாடி தரப்பினரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்க இருந்த சசிகலா சிறை சென்றதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து பலகட்ட சிக்கல்களுக்குப் பிறகு அவர் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கும் சசிகலாவுக்கும் எதிராக தர்மயுத்தம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பின் நாட்களில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் சமாதான தூது நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது! ஒரே போடாய் போட்ட சசிகலா? ஓபிஎஸ் ஆதரவு? குழப்பத்தில் ர.ர.!
சசிகலா திட்டம்
அதே நேரத்தில் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்திருக்கிறது. திமுக எதிர்ப்பு என்ற பிரதான கொள்கையிலிருந்து அதிமுக விலகிச் செல்வதாகவும் இதனால் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தான் தேவை என மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.
சட்ட போராட்டம்
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓபிஎஸ் தரப்பு என கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த பொது குழுவில் அதிமுக வரலாறு காணாத அளவுக்கு ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக இரண்டாவது பொது குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பு முயன்று வரும் நிலையில் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் கூறியதோடு ஏழாம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
கடும் விமர்சனம்
இந்நிலையில் தான் அதிமுகவில் சசிகலா குறித்த பேச்சுகளும் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுக விவகாரங்களில் தலையிடாமல் அமைதி காத்து வந்த சசிகலா கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து பேசி வருகிறார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் குறித்து வாய் திறக்காதவர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்த அவர் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
அதிமுக தலைமை அலுவலகம்
மேலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் வரும் நிச்சயம் தொண்டர்கள் படைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என அவர் கூறியுள்ளார். சிறை செல்வதற்கு முன்பாக பொதுச்செயலாளர் என்ற பெருமையோடு அதிமுக தலைமை அலுவலகம் சென்ற சசிகலா அதன்பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் அந்தப் பக்கமே செல்லவில்லை. இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதிமுக அலுவலகம் செல்வேன் என சசிகலா கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
எடப்பாடிக்கு சிக்கல்
இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறிய நிலையில் கோதாவில் இறங்கியுள்ள சசிகலாவால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. மாறி மாறி கட்சியின் முக்கிய புள்ளிகள் பேசி வரும் நிலையில், சசிகலாவும் களத்தில் இறங்கினால் அது எடப்பாடி பழனிசாமிக்குத் தான் பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.