மிக தகுதி வாய்ந்த நபர் சத்யராஜ்.. கலைத்துறையில் இருந்து திராவிட கொள்கை பேசுபவர்.. ஸ்டாலின் புகழாரம்!
சென்னை: "மிக மிக தகுதி வாய்ந்த நபரான சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் இருந்து சுயமரியாதை, பகுத்தறிவு என திராவிட கொள்கைகளை பேசுபவர் சத்யராஜ்” என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா, விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சத்யராஜுக்கு 'கலைஞர் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரத்துக்கு 'ராஜரத்னா விருது’, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு 'இயல் செல்வம் விருது’, முனைவர் காயத்ரி கிரிஷுக்கு 'இசைச் செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு 'நாதஸ்வரச் செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு 'தவில் செல்வம் விருது’, முனைவர் தி.சோமசுந்தரத்துக்கு 'கிராமியக் கலைச் செல்வம் விருது’, பார்வதி ரவி கண்டசாலாவுக்கு 'நாட்டியச் செல்வம் விருது’ ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து, முத்தமிழ் பேரவையின் பொன்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கியதில் மகிழ்ச்சி. மிக மிக தகுதி வாய்ந்த நபரான சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் இருந்து சுயமரியாதை, பகுத்தறிவு என திராவிட கொள்கைகளை பேசுபவர் சத்யராஜ்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நேரத்தை ஒதுக்கி, தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வந்தார். அவர் வழியிலே நானும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.
முத்தமிழ்ப் பேரவை வழங்கியுள்ள இந்த விருதுகள் என்பது முத்தமிழறிஞர் கலைஞரே வழங்கிய விருதுக்கு ஒப்பானது. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் முத்திரை பதித்தவர் கலைஞர். முத்தமிழுக்கு இலக்கணமாக விருது பெற்ற நீங்கள் அனைவரும் உங்களைப் போல பல திறமைசாலிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். செழிக்கனும். இடையில் சாதி, மதம் என அந்நியர்கள் மூலமாக பல்வேறு பண்பாட்டுத் தாக்குதல்கள் நடந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்க தமிழின் வலிமையும் நமது பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. அவை இரண்டையும் கண் போலக் காக்க வேண்டும்.” என்றார்.












Click it and Unblock the Notifications