பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை.. எப்படி விண்ணப்பிக்கணும்? கடைசி நாள்? முழு விவரம்
சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் மூலம் பராமரிப்புப் படியை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தகுதியிருந்தும் பயன் அடையாத தமிழக மாணவர்களுக்காகச் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
படிப்புகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

விண்ணப்பம் செய்யலாம்
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (9 மற்றும் 10-ம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.

எந்த இணையதளம்?
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்குப் புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் கல்வி இணையதள வழி (https://escholarship.tn.gov.in/ ) விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவேற்றம் செய்ய வேண்டும்
கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வெளியானது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications