பரந்தூரில் பதற்றம்.. ஏகனாபுரம் மக்கள் மீது வழக்கு..! இது தான் திராவிட மாடலா? சீனுக்குள் வந்த சீமான்
சென்னை: பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அந்த கிராமத்தில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பரந்தூர் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கொடுங்கோன்மை என சீமான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
ஆனால், போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை திராவிட மாடல் திமுக அரசு ஒடுக்கி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று ( ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், பொதுமக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்குவது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு வழக்கு பதிவதென்பது வெட்கக்கேடானதாகும்.
மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா?
எனவே, தமிழ்நாடு அரசு ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிக்க வேண்டுமெனவும், தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications