பாஜகவின் மதவாதத்தை எதிர்க்கிறார்கள்.. பிஎஃப்ஐ அலுவலக என்ஐஏ ரெய்டுக்கு இதான் காரணம் - சீமான் காட்டம்
சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டு இருப்பது ஜனநாயக படுகொலை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

என்.ஐ.ஏ. சோதனை
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் அந்த அமைப்பின் அலுவலகங்கள் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சீமான் கண்டனம்
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து மத்திய அமலாக்கத்துறை, தேசியப்புலனாய்வு முகாமை போன்றவற்றின் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடெங்கிலும் அத்துமீறிய சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் பாய்ச்சி, அவற்றை முடக்க நினைப்பதென்பது கொடும் சனநாயகப் படுகொலையாகும்.

பழிவாங்கும் போக்கு
சனநாயகப்பாதையில் இயங்கும் மக்கள் ஆதரவு இயக்கங்களான எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் மதவாதத்திற்கெதிரான தொடர் செயல்பாடுகளையும், கருத்துப்பரப்புரைகளையும் தாங்க முடியாது, அதிகாரப்பலம்கொண்டு அவ்வியக்கங்கள் மீது ஏவப்படும் மிகமோசமான அடக்குமுறைகளும், எதேச்சதிகாரப்போக்குகளும் அப்பட்டமான பழிவாங்கும் போக்கேயாகும்.

சதிச்செயல்
மதவாத அரசியலையும், பாசிசப்போக்கையும் கட்டவிழ்த்துவிட்டு, நாட்டை மதத்தால் துண்டாட முயலும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் அநீதிச்செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதனாலேயே, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது இடங்களில் சோதனைகள் நிகழ்த்தப்படுவதுமான சதிச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.

ஒற்றைக்கட்சி ஆட்சி
அதிகாரத் திமிர் கொண்டு சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை நோக்கி நகரும் பாஜக அரசின் இச்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனங்களையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்." என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications