நடிகர் விஜய்யையா நானா?.. அவர் வீட்டு வாசல் வரை போனேன்.. அப்புறம் திரும்பிட்டேன்.. சீமான் விளக்கம்
சென்னை: ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் உங்களால தாங்க முடிய மாட்டேங்குது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம்தானே தவிர அது பட்டயம் கிடையாது. அந்த காலத்தில் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் இருந்தார். அதற்கு அடுத்து எம்ஜிஆர் வந்தார். அடுத்து ரஜினிகாந்த் வந்தார்.
இந்த தலைமுறையில் தம்பி விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இருப்பதில் அதிக வியாபாரம் அவருக்குத்தான். அதிக வசூல் அவருக்குத்தான். அவருக்குத்தான் பெண்கள், குழந்தைகள் விரும்பி ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு நிரந்தரம் அல்ல.. விஜய்தான் இப்ப சூப்பர் ஸ்டார்.. கோதாவில் குதித்த சீமான்!
யதார்த்தம்
யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் உங்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்தான் இன்று உயர்ந்தநிலையில் இருக்கிறார். அதை ஒத்துக் கொண்டு ஆமாம் என சொல்ல வேண்டியதுதானே. ரஜினிகாந்தே ஒத்துக் கொள்கிறாரே என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிலையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவர் பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் நான் விஜய்க்கு மட்டும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. நடிகர் சூர்யாவுக்கு ஒரு பிரச்சினை வந்த போதும் குரல் கொடுத்தேன், அது போல் அவருடைய தம்பி கார்த்திக்கு பிரச்சினை வந்த போதும் குரல் கொடுத்தேன்.
சிலம்பரசன்
சிலம்பரசனுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன். எல்லோருக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன். 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜய்யுடன் நான் கூட்டணி வைப்பேனா என கேட்கிறீர்கள். இதை நீங்கள் தம்பி விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். இன்னொன்று அவர் முதலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை அறிவிக்க வேண்டும்.
பயந்து ஓடிவிட்டால்
அதன் பின்னர் அவருக்கும் எனக்கும் ஒத்து போக வேண்டும். என் தலைவன் பிரபாகரன் என்று நான் சொல்லுவேன். பிரபாகரன் என்று சொன்னதும் பல பேர் இங்கு பயந்து ஓடி விடுகிறார்கள். நான் தம்பி விஜய்யை என் எதிரே உட்கார வைத்துக் கொண்டு பிரபாகரன் என நான் சொன்னால் அவர் பயந்து ஓடிவிட்டால் என்ன செய்வது? எங்களுக்குள் ஒத்து போக வேண்டும். ஒத்துக் கொண்டு என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்.
விஜய்யை சந்திக்கவில்லை
அதெல்லாம் காலப்போக்கில் பார்க்கலாம். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்றார். இதையடுத்து விஜய்யை அண்மையில் நீங்கள் சந்தித்தது ஏன் என சீமானிடம் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறுகையில் விஜய்யை நான் சந்திக்கவில்லை. அவர் வீட்டு வாசலில் நின்றேன். அவர் வீட்டு வாசல் வழியாக நடந்து சென்றேன். விஜய் வீட்டுக்கு பக்கத்து வீடு இயக்குநர் பாரதிராஜாவினுடையது. நான் அவரை சந்திக்க செல்லும் போதெல்லாம் நானும் அவரும் நடந்து செல்வோம். அப்போது விஜய் வீட்டு வாசலில் நின்று அங்கு இருப்பவர்களிடம் தம்பி விஜய் குறித்து விசாரிப்பேன். அவர்கள் ஷூட்டிங் போயிருக்கிறார், அங்கு இருக்கிறார், இங்கு இருக்கிறார் என சொல்வார்கள். அதை கேட்டுக் கொண்டு நான் அந்த இடத்தை விட்டு செல்வேன். மற்றபடி நான் விஜய் வீட்டிற்குள் செல்லவில்லை, அவரை நான் பார்க்கவும் இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.