மணல் குவாரி பிசினஸில் .. மண் அள்ளிப் போட்டு மூடிய சேகர் ரெட்டி.. திடீர் சபதம்!
சென்னை: நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சேகர் ரெட்டி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வருகிறது. சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன'
இந்த சூழலில் தன்னை பற்றியும் மணல் வியாபாரம் பற்றியும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வரிடம் ரூ.1 கோடி நிதி கொடுத்த சில நாளில்.. சேகர் ரெட்டி மீது பாய்ந்த போலீஸ் கேஸ்.. அரசு அதிரடி
தவறான தகவல்
இதுகுறித்து, தொழில் அதிபர் சேகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னை பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணி துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
நாங்கள் வாங்கியது இல்லை
எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடத்தில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
ஒப்பந்தம் பெறவில்லை
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இதை தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை.
இனி ஈடுபட மாட்டேன்
இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொழில் அதிபர் சேகர் ரெட்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.