தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தியது யார்? திடீரென வந்த கேள்வியால் திணறிப்போன அருண்ராஜ்
சென்னை: தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது தொடர்பாகவும், அவரின் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதாலும், விஜய்க்கு எந்தவித நெருடலும் இல்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு பயனளிக்கும் என்று கருதப்பட்டு வருகிறது.

ஆனாலும் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், சட்டைப் பையில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றவில்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. ஏனென்றால் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை தவெக பின்பற்றுகிறதா என்று நாதக மற்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தலைவா பட விவகாரத்தையும் பலரும் எடுத்துக்காட்டி பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், செங்கோட்டையன் இணைப்பு நிகழ்வு தமிழ்நாடே உற்று பார்க்கும் வகையில் அமைந்தது. செங்கோட்டையன் மீது விஜய்க்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இதனால் விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறார். திமுகவை வீழ்த்தக் கூடிய சம கால எம்ஜிஆர்-ராகவே விஜய்யை மக்கள் பார்க்கிறார்கள்.
அதிமுகவும், தவெகவும் வித்தியாசமான கொள்கைகளை கொண்ட கட்சி அல்ல.. திராவிட சித்தாந்தம் பேசக் கூடிய கட்சிதான்.. கொள்கை அளவில் திமுக, தவெகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. என்ன திமுக பெயரளவில் கொள்கைகளை வைத்திருக்கிறது. அதனால் அண்ணன் செங்கோட்டையன் அதே கொள்கையுடன் இருக்கும் கட்சியில் இணைவதில் பெரிய சிக்கல் இல்லை.
ஜெயலலிதாவின் படம் சட்டையில் இருந்த போதுதான் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதில் எந்த நெருடலோ, சங்கடமோ எங்களுக்கு இல்லை.. அதேபோல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கபட்டவர்தான். திமுக அமைச்சர்கள் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என்பதற்காக அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?
தலைவா பட விவகாரம் எல்லாம் நடந்து முடிந்த சம்பவம்.. அது பெரிய விஷயம் அல்ல.. செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை எதிர்க்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை.. அதனால் வாச்சாத்தி சம்பவம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள்.. அனுபவமிக்க தலைவர்கள் தவெகவில் இணையும் போது எதிர்க்கட்சியினர் பயப்படுவது இயல்புதான்..
அதனால் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டுகொள்ள போவதில்லை. செங்கோட்டையன் இணைந்திருப்பதால், தவெக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதிதாக வந்தவர் என்பதால், அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை.. விஜய்யின் கரங்கள் வலுப்பெற்றுள்ளது என்று பணிகளை செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications