தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்- ஆளுநர் அதிகாரப்பூர்வ உத்தரவு!
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். அதேபோல் முதல்வரின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமிக்கப்பட்டனர்.
தற்போது மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு இடம் மாற்றம் செய்துள்ளார். மருத்துவத் துறை முதன்மைச் செயலாளராக பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக இருந்த ஜெகன்னாதன், பொதுத் துறை செயலாளர், தேசிய சுகாதார திட்டக் குழு இயக்குனராக தரேஸ் அகமது மற்றும் சுகாதார திட்ட இயக்குனராக உமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞ்ராக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் எம்.பியுமான சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டார். 2002-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றியவர் சண்முகசுந்தரம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 முதல் 2001 வரை தமிழக அரசு வழக்கறிஞராகவும் சண்முகசுந்தரம் பணியாற்றினார். 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்ந்தார் என்பதற்காக வெல்டிங் குமார் உள்ளிட்ட ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் சண்முகசுந்தரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications