‛பராசக்தி' திரைப்படம் ஒத்திவைப்பு.. சென்சார் சான்று கிடைக்காததால் நெதர்லாந்தில் அறிவிப்பு
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‛பராசக்தி' திரைப்படத்துக்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இந்த திரைப்படம் வரும் 10ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் சான்று கிடைக்காததால் நெதர்லாந்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‛பராசக்தி' ஆகிய திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி ஜனவரி 10ம் தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கடைசி படம் என்பதாலும், படத்தில் அரசியல் வசனங்கள் இருப்பதாலும் அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் ‛பராசக்தி' திரைப்படம் தமிழகத்தில் 1964ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள ‛பராசக்தி' திரைப்படம் திட்டமிட்டப்படி ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ‛பராசக்தி' திரைப்படத்துக்கும் சென்சார் சான்று கிடைக்கவில்லை.
இதனால் ‛பராசக்தி' திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா? ‛ஜனநாயகன்' போல் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் திரைப்படத்துக்கான சென்சார் சான்று கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
இப்படியான சூழலில் தான் நெதர்லாந்து நாட்டில் ‛பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ‛சென்சார்' சான்று கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் உள்ள நிலையில் நெதர்லாந்தில் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு 10 நாட்களில் அதற்கான பணம் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி பிற நாடுகள் மற்றும் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் ‛பராசக்தி' திரைப்படம் வெளியாகுமா? இல்லையா? என அறிய நாம் இன்னும் காத்திருக்க வேண்டும். அதுபற்றி தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. படக்குழுவோ சென்சார் சான்றிதழ் பெற்று முறைப்படி ஜனவரி 10ம் தேதி படத்தை திரையிடும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications