அசத்தல்.. ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு உங்கள் கையில்- ஆளுநர் உரையில் தகவல்
சென்னை: புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்துள்ள நிலையில், இன்று சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில், மரபுப் படி ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரை அந்த வருடத்தில் ஆட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கப் போகிறது என்பதற்கான ஒரு வழிகாட்டி போல பார்க்கப்படக் கூடியது.

ஆளுநர் உரையின் முக்கியத்துவம்
அந்த வகையில் ஆளுநர் உரையில், பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கான வரைபடத்தை இன்று ஆளுநர் உரை மூலம், அடிக்கோடிட்டு காட்டியுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில், பல காலம் எதிர்பார்த்த பல திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு திட்டம் ரேஷன் கார்டு தொடர்பானது.

15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு
ஆம்.. புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து விட்டு அது எப்போது வருமோ என காத்திருக்க தேவையில்லை. அரசு தனது நலத் திட்டங்களை ரேஷன் கார்டு வழியாக செய்து வருகிறது.

நிவாரணத் தொகை
குறிப்பாக, 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில், பொதுமக்களுக்கு இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இப்படியான உதவித் தொகையை பெற ரேஷன் கார்டுதான் அடிப்படை தேவை. எனவே இது வரவேற்கத் தக்க அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

விலையில்லா அரிசி
பொதுவிநியோகம் சார்ந்த மேலும் சில அறிவிப்புகளையும், தமிழக ஆளுநர் உரை வெளியிட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை விலை குறைப்பால் தினசரி பால் விற்பனை 1.5 இலட்சம் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார் ஆளுநர்.

முறைப்படுத்தப்பட்ட கொள்முதல்கள்
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களின் கொள்முதல் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தனது உரையில் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications