வேதனையாக இருக்கு! கைது செய்யப்பட்டவர்களை விடுதலை பண்ணுங்க! திடீர் அறிக்கை விட்ட சமக சரத்குமார்!
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளியில் +2 பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்வதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவி படித்து வந்த பள்ளி முன்பு நேற்று முன்தினம் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அது வன்முறையாக மாறியது. பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.
வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியில் இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 302 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துரை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை
இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்வதாக சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்," கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக, மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் போராடினர்.

சமக சரத்குமார்
அதில், கடந்த 17-ந்தேதி விரும்பத்தகாத நிகழ்வாக வன்முறை வெடித்தது துரதிர்ஷ்டவசமானது. வன்முறை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. நமது காந்திய தேசத்தில் அறவழியில் அயராது போராடினால் நிச்சயம் நீதி நிலைக்கப்பெறும்.அரசை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களின் உரிமைக்காக போராடுவதற்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை, முறையின்றி பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களையும், வன்முறைக்கு தூண்டியவர்களையும் கண்டறிந்து தண்டிப்பது நியாயம் தான்.

வேதனையளிக்கிறது
ஆனால், அதேசமயம் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது. போராட்ட சமயத்தில் காவல்துறையினர் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

வேண்டுகோள்
எனவே இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில்கொண்டு தமிழக அரசு, மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications