ரிசார்ட்களில் விறுவிறு புக்கிங்! கவுன்சிலர்களை கவனிக்க தனிடீம்! பதவிகளை குறிவைக்கும் பிரமுகர்கள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், வெற்றிபெறுபவர்களை கவனிக்க இப்போதே ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர் மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் பதவியை எதிர்பார்ப்பவர்கள்.
கூவத்தூர் ரிசார்டில் எம்.எல்.ஏ.க்களை தங்கவைத்து அதிமுக ஆட்சியை சசிகலா தொடர வைத்தது போல், நாளைய தினம் கவுன்சிலர்களாக வெற்றிபெறுபவர்களை ரிசார்ட்களில் தங்கவைத்து பாதுகாத்து மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் ஆகிவிடலாம் எனக் கணக்குப் போட்டுள்ளனர் முக்கியப் பிரமுகர்கள் பலர்.
இதனால் நேரடி தேர்தலுக்கு இணையாக மறைமுகத் தேர்தலும் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகம் முழுவதும் கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் அன்றைய தினமே அனைத்து முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கவுன்சிலர்களை பலமாக கவனிக்க ஆயத்தமாகிவிட்டனர்.

மறைமுகத் தேர்தல்
ஏனெனில் மறைமுகத் தேர்தலில் ஒவ்வொரு கவுன்சிலர் அளிக்கக் கூடிய வாக்கும் மிக முக்கியமானது என்பதால் அவர்களை தங்கள்வசப்படுத்தும் முயற்சியில் பதவிகளை எதிர்பார்ப்பவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, என பல இடங்களில் ரிசார்ட்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் கவுன்சிலராக வெற்றிபெறுபவர்களை தங்க வைக்க ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் புக்கிங் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விறுவிறுப்பு
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளைய தினத்தில் இருந்து மறைமுகத் தேர்தல் நடைபெறும் நாளான மார்ச் 4-ம் தேதி வரை கவுன்சிலர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவிகளை குறிவைத்து காய்நகர்த்துபவர்களுக்கு இருக்கிறது. இதனால் நேரடி தேர்தலுக்கு இணையாக மறைமுகத் தேர்தலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.

கூவத்தூர் பாணி
கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்திய போது அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பை கூவத்தூர் ரிசார்ட்டில் வைத்து சுமூகமாக முடித்து வைத்து ஆட்சியை தொடர வைத்தார் சசிகலா. இன்று உள்ளாட்சி அமைப்புகளில் பதவி நாற்காலியில் அமர துடிப்பவர்கள் பலரும் அந்த கூவத்தூர் நிகழ்வையே முன்மாதிரியாக கொண்டு செயல்பட முன்வந்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications