யூபிஎஸ்சி தேர்வில் மாற்றுத்திறனாளி ரஞ்சித் வென்றதில் மகிழ்ச்சி.. ஸ்டாலின் பாராட்டு
சென்னை: இந்திய குடிமைப் பணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசு தேர்வாணையம் எனப்படும் யூபிஎஸ்சி தேர்வு நடத்தி ஆட்களை நிரப்பி வருகிறது. இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சி பணி, வெளியுறவு துறை, வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யூபிஎஸ்சி தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் இந்தியாவில் முதலிடத்தையும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்களில் ஐஏஎஸ் பதவிக்கு 180 பேரும் ஐஎஃப்எஸ் பதவிக்கு 36 பேரும் ஐபிஎஸ் பதவிக்கு 200 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 302 பேர் மத்திய அரசின் சேவைகள் குழு ஏ பிரிவு அதிகாரிகளாகவும் 118 பேர் அதே குழுவின் பி பிரிவு அதிகாரியாகவும் நியமிக்கப்படுவார்கள்.
இந்த தேர்வில் பொதுப் பிரிவில் 263 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும் ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மொத்தம் தேர்வான 761 பேரில் 545 பேர் ஆண்கள், 216 பேர் பெண்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும் இந்த பதவிகளுக்கு சிலர் தேர்வாகியுள்ளனர். இந்திய குடிமை பணிகளில் தேர்வான தமிழக மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.
கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் அவர்கள் தேர்வுபெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அது போல் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் #UPSC தேர்வில் சாதித்துள்ள பேச்சு & கேட்கும் திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர் கோவை ரஞ்சித்திற்கு என் பாராட்டுகள். கடின உழைப்பு - தன்னம்பிக்கை - இலக்கில் தெளிவு இருந்தால் வெற்றி நிச்சயமென உணர்த்திய ரஞ்சித்தின் பணிகள் சிறக்கட்டும். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்