புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அமைச்சருடன் விரைவில் சந்திப்பு.. மா.சுப்பிரமணியன் திட்டம்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரேடியோ கதிர் இயக்கவியல் துறை தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் கட்டமைப்பை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டபட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் இந்த புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
திருமணத்துக்கு பிளக்ஸ் வைப்பதில் மோதல்- கம்பம் அருகே 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு!
6 புதிய மருத்துவக் கல்லூரிகள்
தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக 1,450 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்தது. நடப்பாண்டில் கூடுதல் இடங்கள் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வீதம் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை வைக்க சுகாதாரத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சிறப்பு வார்டு தயார்
தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் உடல் நலம் பாதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல் தேவை
சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் பரப்பில் மாதவரம் பால் பண்ணை அருகே கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அங்கு விரைவில் நிறுவப்படும்.
பூஸ்டர் தடுப்பூசி
தமிழகத்தில் கொரனோ முதல் தவணை தடுப்பூசியை 96 சதவிகிதம் பேரும், இரண்டாம் தவனை 90 சதவிகிதம் பேரும் செலுத்தியுள்ளனர். இதேபோல் பூஸ்டர் தடுப்பூசிகளை பொருத்தமட்டில், இம்மாதம் இறுதி வரை இலவசமாக போடப்படுகிறது. இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்திற்கு குறுகிய காலம் மட்டுமே மீதம் உள்ளதால், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி வார இறுதியில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.