சென்னை வெள்ளம் டூ கஜா வரை.. மாறாத ஸ்டிக்கர் கலாசாரம்.. அதையும் நிவாரணத்துக்கு செலவிடுவது எப்போது?
சென்னை: சென்னை வெள்ளம் ஏற்பட்டபோது தொடங்கிய ஸ்டிக்கர் ஓட்டும் கலாசாரம் தற்போது கஜா புயலில் நடந்து வருவது வேதனையை அளிக்கிறது. ஸ்டிக்கருக்கு செலவு செய்யும் காசை நிவாரணத்துக்கு பயன்படுத்தும் பக்குவம் வருவது எப்போது?
தற்போது பிறந்த நாள் தொடங்கி இறந்தநாள் வரை டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு விளம்பரம் போல் உள்ளது. அதிலும் சிறிய பொருள்களை நிவாரணமாக கொடுத்தாலும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அனைவருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
சென்னை வெள்ளம் ஏற்பட்ட போது மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, சில இடங்களில் ஸ்டிக்கர் அடிக்க தாமதமானதால் அப்பகுதிகளுக்கு நிவாரண உதவிகளையும் தாமதப்படுத்திய சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது.
சமூகவலைதளங்கள்
அதிலும் மற்ற மாணவர்கள் வழங்கிய நிவாரணங்களில் கூட தமிழக அரசின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு சர்ச்சை எழுந்தது. இதை சமூக வலைதளங்களில் நார் நாராக கிழித்ததும் தெரிந்த கதைதான். இந்த ஸ்டிக்கர் ஒட்டும் கலாசாரம் தற்போது கஜா புயலிலும் தொடர்கிறது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க அரசியல் தலைவர்கள் பணியை தொடங்கினர்.
நோக்கத்தில்...
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது போல் அதை வழங்கும் வையும் இரட்டை இலையின் நிறமான பச்சை நிறத்தில் வழங்கப்பட்டிருந்தது. அரசாவது தாங்கள் மீண்டும் மக்களை சந்திக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் ஸ்டிக்கர் வெளியிடுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.
தண்ணீர் பாட்டில்கள்
ஆனால் திரை மறைவில் ரஜினிகாந்த் எத்தனையோ உதவிகளை செய்து வருவதாக நாம் கேள்விப்பட்டது உண்டு. அப்படியிருக்கையில் அவரது ரஜினி மக்கள் மன்றத்தினரும் உணவு பொருட்கள் முதல் குடிக்கும் தண்ணீர் பாட்டில்கள் வரை ரஜினியின் படங்களை ஒட்டியுள்ளனர்.
வரிசையில்
அதிலும் தண்ணீர் லாரிக்கு பின்புறத்தில் ரஜினியின் தலைப்படத்தை வரைந்துள்ளனர். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்னும் கட்டுக்கடங்காமல் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மும்முரமாக உள்ளன. சரி இவரும் வருங்கால அரசியல்வாதிதானே என கடந்து செல்ல நினைத்தால் தேசிய கட்சியான பாஜகவும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
தமிழிசை ஸ்டிககர்
கஜா புயலுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை ஆகியோரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கலர் கலரான குடங்களிலும் தமிழிசையின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது சிரிப்பை வரவழைக்கிறது.
எதுக்கு இந்த விளம்பரம்
நாம் சோற்றில் கை வைப்பதற்காக சேற்றில் கை வைத்த டெல்டா விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களில் எதற்கு இந்த விளம்பரம். இதுபோல் விளம்பர ஸ்டிக்கர்கள் அடிப்பதற்கே பல கோடி செலவாகியிருக்கும். அதை நிவாரணத்துக்கு செலவிட்டிருந்தால் கூட புண்ணியமாக போயிருக்கும். அதை விடுத்து யாருக்கும் வேண்டும் இந்த விளம்பரம்?