அந்த 6 பேருக்கு நன்றி.. ‘எல்லோரையும் புரிஞ்சுக்கிட்டேன்'.. வேட்பாளரின் வித்தியாசமான நோட்டீஸ்!
சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி எண்ணப்பட்டன. சட்டமன்ற தேர்தலைபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. திமுகவுக்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பின்னடைவை சந்தித்தது.
தாய்-மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்... மிரட்டிய ஆண் நண்பர் கைது...என்ன நடந்தது?
சுவாரஸ்சிய சம்பவங்கள்
இது தவிர உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. கோவையில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்று உலகளவில் டிரெண்டிங் ஆனார். அவரது குடும்பத்தினர் கூட அவருக்கு ஓட்டுபோடவில்லை என்று மீம்ஸ்கள் உலா வந்தன. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் 90 வயது மூதாட்டி ஒருவர்.
வித்தியாசமான நோட்டீஸ்
இதேபோல் சகோதரிகள் இருவர் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அடித்துள்ள வித்தியாசமான நோட்டீஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலூர் கிராமத்தில் 9-வது வார்டுக்கு போட்டியிட்ட ஓ.முத்து தோல்வியை தழுவினார்.
மொத்தம் 6 ஓட்டுகளே கிடைத்தன
அவருக்கு மொத்தம் 6 ஓட்டுகளே கிடைத்தன. தோல்வி அடைந்த போதிலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் நோட்டீஸ் ஒட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல்.. நன்றி தெரிவிக்கும் துண்டு பிரசுரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த நோட்டீசில் '' எனது அன்பான பென்னலூர் ஊராட்சியின் 9-வது வார்டு சொந்தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தோல்வி அளித்ததற்கு எதற்கு நன்றி என்று கேட்கலாம்.
வாழ்க்கையில் ஜெயிக்க..
வாக்குகளில் என்னை தோற்கடித்து வாழ்க்கையில் ஜெயிக்க கற்று கொடுத்தீர்கள். 25% பந்தத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25% பணத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25% பாட்டிலின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25% நம்பவைத்து பொய்யாக்கி ஓட்டு பிரிந்தது. உங்கள் அனைவரையும் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. ஆறுதலுக்காக 6 ஓட்டு போட்ட அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி! நன்றி! நன்றி!
பொது சேவை தொடரும்
மொத்தத்தில் தோற்று ஜெயித்துள்ளேன். உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் போல் எனது பொது சேவை தொடரும். இப்படிக்கு ஓ.முத்து என்று அவர் கூறியுளளார். இந்த நோட்டீஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.