"மகளிர் உரிமை தொகையில் பிடித்தம்.." சு.வெங்கடேசன் வங்கிகளுக்கு வைத்த கோரிக்கை.. இது முக்கியம் ஆச்சே
சென்னை: தமிழ்நாடு முழுக்க குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021இல் தேர்தல் பிரசாரத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்பதாகும்.. இந்த வாக்குறுதிக்குத் தேர்தல் பிரசாரத்தின் சமயத்திலேயே மிகப் பெரியளவுக்கு வரவேற்பு கிடைத்தது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டத்தின் மீதே மக்களுக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்த இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றிருந்தது.
மகளிர் உரிமை தொகை: தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இத்திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்திய நிலையில், தொடர்ந்து பல முக்கிய தகவல்கள் வெளியான. ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 13 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழகம் முழுக்க பலரும் விண்ணப்பித்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
செப். 15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணம் சென்றடைந்தது. இந்தத் திட்டத்தில் பயன் பெற்ற பெண்கள் பலரை அரசைப் பாராட்டி வருகின்றனர். பெண்கள் அனைவருக்கும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில். இதில் எந்தவொரு பிடித்தமும் செய்யக் கூடாது என்று எம்பி சு வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
சு வெங்கடேசன்: இது குறித்து மதுரை சிபிஎம் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "குறைந்த பட்ச இருப்பு, குறுஞ்செய்தி கட்டணம் என மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்கின்றன. செடியாக இருந்தாலும், மணம் வீசும் மலராக இருந்தாலும் ஆடுகளைப் பொறுத்தவரை எல்லாம் இரை தான் என்பதுபோல் இருக்கிறது வங்கிகளின் செயல். வங்கிகளே பாலின சமத்துவ நகர்வில் பிழை செய்யாதீர்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சு வெங்கடேசனின் இந்த ட்வீட்டை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மகளிர் உரிமை தொகையாக வழங்கப்படும் தொகையை எந்தக் காரணத்தைக் கொண்டும் பிடித்தும் செய்யக் கூடாது என்று மதுரை சிபிஎம் கட்சியின் எம்பி சு வெங்கடேசனின் ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு: மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்ட பெண்கள், தாங்கள் தகுதியுள்ளவர்கள் என கருதினால் வரும் திங்கள் முதல் இதில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications