தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன்: காய்கறி, மீன், இறைச்சிக் கடைகள் செயல்படும், ஹோட்டல்களில் பார்சல் ஓகே
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல உணவகங்களில் பார்சல் வாங்கிக்கொள்ள மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இன்றே அசைவ கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. சனிக்கிழமை சிக்கன், மட்டன்,மீன் ஆகிய மாமிச உணவுகள் சாப்பிடாதவர்கள் கூட இன்றைய தினமே கடைகளுக்கு சென்று கறி வாங்கி வந்து பிரிட்ஜ்களில் ஸ்டாக் வைத்து விடுகின்றனர்.
நாளை லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு எனவும் அரசு தெரிவித்துள்ளது.

என்னென்ன அனுமதி
மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும். பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும். உணவகங்களில் பார்சல் வாங்கிக்கொள்ள மட்டும் அனுமதி. அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.

புறநகர் ரயில் சேவை
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் பத்திரிக்கைகளுடன் செல்லலாம். காய்கறி கடைகள், பலசரக்குக் கடைகள் மீன், இறைச்சி கடைகள் செயல்படும். புறநகர் ரயில் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுமையாக நாளையே போய் கறி,மீன் வாங்கலாம். இன்றைய தினமே கூட்டம் கூடத் தேவையில்லை.

அத்தியாவசியமற்ற கடைகள் மூடல்
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இருக்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் முழு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே சுற்றினால் நடவடிக்கை
அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் ஓடாது
ஊரடங்கு நாளில் பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகள் முழு ஊரடங்கு நாளில் இயக்கப்படாத நிலையில் ஆம்னி பேருந்துகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications