டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல் - சட்டசபையில் அஞ்சலி
தமிழகத்தை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்தெரிவிக்கப்பட்டது.
சென்னை: மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
Recommended Video
மேகாலயா மாநிலத்தில் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஷ்வா தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
அசாமின் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.

விபத்தில் மரணம்
இதில், கார் டிரைவர் மற்றும் விஷ்வா தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற தமிழக வீரர்கள் ந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் நாளை காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.

மத்திய அமைச்சர் இரங்கல்
விஷ்வாவின் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார்.. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் " தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா, 83வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க ஷில்லாங்கிற்கு செல்லும் வழியில் மேகாலயாவில் உள்ள ரி-போய் என்ற இடத்தில் விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
விஷ்வா தீனதயாளன் மரணத்திற்கு மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகச்சிறந்த வீரரை நாடு இழந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் இரங்கல்
தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள விஸ்வா, எதிர்காலத்தில் சாதனைகளைச் செய்திடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி மரணம் நேரிட்டிருப்பது வேதனை தருகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சட்டசபையில் மவுன அஞ்சலி
விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்கள். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார் தீனதயாளன்.

சர்வதேச போட்டிகளில் பதக்கம்
வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு சக டேபிள் டென்னிஸ் வீரர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications