எங்க பர்னிச்சர் நாங்க உடைப்போம்! தடதடத்த பொதுக்குழு! தமிழ்மகன் உசேனின் சைலண்ட் சாதனை! பக்கா ஸ்கெட்ச்
சென்னை : பல்வேறு கட்ட போராட்டங்கள், சர்ச்சைகள், தீர்ப்புகளுக்குப் பிறகு தொடங்கிய அதிமுக பொதுக் குழு அதே வேகத்திலேயே ஒரு முடிவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்காத நிலையில் , ஓபிஎஸ் நினைத்ததும் ஓரளவு நடந்திருக்கிறது. ஆனால் சத்தமில்லாமல் நிரந்தர அவைத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் தமிழ் மகன் உசேன்..
ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றியதற்குப் பிறகு அதிமுக வரலாற்றில் இப்படி ஒரு பொதுக்குழு கூட்டத்தை தொண்டர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு தண்ணீர் பாட்டில் வீச்சு, பஞ்சர் செய்யப்பட்ட டயர் என அல்லோலகல்லப்பட்டு முடிந்திருக்கிறது.
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்திப் போட பற்றியது பரபரப்பு தீ.
இதுக்கும் திமுக தான் காரணமா? இதென்னப்பா புதுக் கதையா இருக்கு! அன்று அப்பா! இன்று மகன்!
அதிமுக பொதுக்குழு
முன்னதாக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கும், பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என தொண்டர்களுக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஓபிஎஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் ஆனால் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக இரு நீதிபதிகள் அமர்வு ஓபிஎஸ்க்கு பச்சை கொடி காட்டியது.
கடும் சலசலப்பு
ஆனால் ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட தான் அதே தொண்டர்கள் நிர்வாகிகளால் இப்படி அவமானப்படுத்தப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்ட மண்டபத்துக்கு ஓபிஎஸ் வந்த போது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார்.
ஓபிஎஸ் அவமதிப்பு
தொடர்ந்து ஓபிஎஸ் ஒழிக என்றும், ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அத்தோடு நில்லாமல் தண்ணீர் பாட்டில் வீச்சு, காகிதம் பறந்தது, டயர் பஞ்சர் செய்யப்பட்டது என தனிப்பட்ட தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத ஓபிஎஸ் கவிழ்ந்த தலையுடன் வெளியேறினார். ஆனால் இந்த களோபரங்களுக்கு மத்தியிலும் சைலண்டாக காய்நகர்த்தி தான் நினைத்ததை முடித்திருக்கிறார் தமிழ் மகன் உசேன்.
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்
இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முட்டல் மோதல்கள், பஞ்சாயத்துகள், உச்சகட்ட சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிய , நிரந்த அவைத்தலைவர் என குறிப்பிட்டார் கே.பி.முனுசாமி. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவியை கைப்பற்றியுள்ளார்.
ஒருமனதாக தேர்ந்தெடுப்பு
அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.
சாதித்த உசேன்
ஆனால் ஒற்றை தலைமைதான் வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாகப் பேசினார். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச்செயலாளர் கனவு நிறைவேறாமல் சற்று தள்ளிப்போய் இருக்கிறது ஆனாலும் அது நிறைவேற்றப்பட போவதுதான். ஆனாலும் இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியில் அதிமுகவின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன்மூலம் தனது நீண்டகால கனவை சாதித்திருக்கிறார் தமிழ்மகன் உசேன்.
Recommended Video
யாருக்கு லாபம்?
அரசு பேருந்து ஓட்டுநராக இருந்த போது எம்ஜிஆர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதை அறிந்து பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தவர் தமிழ்மகன் உசேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளார். எம்ஜிஆர் மன்றத்திலேயே நீண்டகாலம் பணியாற்றி வந்த தமிழ்மகன் உசேன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுசூதனன் மறைவிற்குப் பிறகு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் நடுநிலை வகித்து வந்த அவர் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்குவரை அறிந்து அவரது தரப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய சூழலில் பொதுக்குழு கூட்டம் யாருக்கு லாபமோ இல்லையோ தமிழ்மகன் உசேன் எனக்கு நூறு சதவீதம் லாபம் தான்.