தமிழகத்தில் 1.66 கோடி பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு- சத்யபிரதா சாகு தகவல்!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1.66 கோடி பேர், தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு வேறு தொகுதிகளில் இருப்பது, ஒரே தொகுதியில் இரு இடங்களில் இடம் பெறுதல் உள்ளிட்டவைகளை தவிர்க்கவும் இந்த நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம், கடந்த, ஆகஸ்ட் 1 முதல் துவங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை வீடு, வீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர், எளிய முறையில் ஆதார் இணைக்க, nvsp என்ற இணையவசதியும், voter helpline 'மொபைல் ஆப்' வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டுச் சாவடி நிலை அலுவலரிடம் படிவம், 6 -பி கொடுத்தல் அல்லது பெறுதல், கருடா மொபைல் செயலி வாயிலாக ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை செய்து கொள்ளலாம்.
மேலும், மாவட்டங்களின் பல பகுதிகளில் ஓட்டு சாவடிகளிலும், வருகிற 3 மற்றும் 4ம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் ஓட்டு சாவடியில், ஓட்டிசாவடி அலுவலர்கள், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பணியில் இருப்பர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைலுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள 6.21கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். கடந்த 1ந்தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில், ஒரு மாதத்தில் 26.7% பேர், வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.