தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினைகளை எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சியான அதிமுக ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. கேள்வி நேரம் அமைச்சர்கள் பதிலுரை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சியான அதிமுக ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மறுநாள் 19ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முழு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளது.

பட்ஜெட் மீதான விவாதம்
இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொது விவாதம்
இதைதொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் தொடங்குகிறது. நாளை பொது விவாதத்தில் இரண்டாம் நாள் தொடர்ச்சியாகவும், 23ஆம் தேதி பொது விவாதத்தின் மூன்றாம் நாள் தொடர்ச்சியாகவும் விவாதம் நடைபெறுகிறது. கேள்வி நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

முதல்வர் பதிலுரை
இதையடுத்து வருகிற வியாழக்கிழமை முன் மானிய கோரிக்கைகள், இறுதி நிதிநிலை அறிக்கை துறை மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு ஆகியவை நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்.

அனல் பறக்கும்
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளான 18ஆம் தேதி எதிர்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு பற்றி பேச அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி அளிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து விட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பொது பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சி எம்எல்ஏக்கள் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications