தமிழக சட்டசபைத் தேர்தல் 2021: தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. சென்னையில் தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தபால் ஓட்டு போடுவதற்கு வருகிற 30ஆம் தேதி வரை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த நாளில், எந்த வாக்காளர் வீட்டிற்கு செல்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் வாக்குகளை அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர். சென்னையில் 12,000 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 7,300 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு, 15 வாக்குகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 பேர், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவர். தபால் வாக்களிப்பவர்களுக்கான தேதி, நேரம் ஆகியவை முன்கூட்டியே செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும், வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பின், வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு போடக்கூடிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரகசியமாக வாக்குப்பதிவு செய்ய இக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. தபால் வாக்களிக்க உள்ளவர்கள் பார்வையற்றவராகவோ, தங்கள் வாக்கை செலுத்த முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தபால் வாக்குப்பதிவு செய்யும் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் வாக்காளர் வீட்டிற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து பின்னர் வாக்குசீட்டு வழங்குவார்கள்.
அப்போது அந்த தொகுதியின் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இருப்பார்கள். ஆனால் வாக்காளர் ஓட்டுப்பதிவு செய்வதை யாரும் பார்க்காத வகையில் மறைமுக வசதி செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்காளர்களிடம் ஓட்டுப்பதிவு செய்த பிறகு ஓட்டு பெட்டியினை பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவந்து அதில் உள்ள ஓட்டுகளை தினமும் எண்ணி பதிவு செய்வார்கள். இந்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒவ்வொரு நாளும் மாலையில் தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிகளிலும் சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் பெட்டியில் வைக்கப்பட்டு சீலிடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதியில்லை எனவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.