ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபைக் கூட்டம் பிப்ரவரி 5 வரை நடைபெறும்
2021ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு
சென்னை: ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. அரசின் சாதனைகளை ஆளுநர் தனது உரையில் பட்டியலிட்டார். பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இம்முறையும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய பின்னர் அதனை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.
கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விலையில்லா மடிக்கணினிகள் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணியில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்கள் வாயிலாகவும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், மின்னணு தொகுப்பில் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்று அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது.
முன்னதாக ஆளுநருடன் எதிர்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று தொடங்கப்பட்ட சட்டசபை கூட்டத்தொடர் மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நாளை சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications