ஜனவரி 13 வரை சட்டசபை கூட்டம்.. அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 13ம் தேதி நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். வழக்கமாக சட்டசபையில் ஆளுநர் வாசிக்கும் உரைகள், ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான்.
இதை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பது மட்டுமே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசிக்காமல் அவர் சில பாகங்களை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையிலேயே குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை. உரையில் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டுவிட்டார். இதனால் அவரின் உரையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று பேசினார்.

இதையடுத்து ஆளுநர் படித்த உரை வாக்கெடுப்பு மூலம் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கண்டனம் தெரிவித்ததால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதன் பின்னர் சட்டசபைக் கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்தலாம் என்பது குறித்த அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜனவரி 13ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications