கருப்பரோ.. காவியோ... யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது.. "குத்தீட்டி"யால் குத்திய அதிமுக!
வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ள பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு நமது அம்மா நாளிதழில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள் நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதங்களின் பெயரால் வாங்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது என்றும் நமது அம்மாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேல் யாத்திரையை நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை நடத்த முடிவு செய்திருந்தது பாஜக. தமிழக அரசு வேலை யாத்திரைக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் தடையை மீறி தினசரி வேல் யாத்திரை நடத்துவதும் காவல்துறையிரால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையானது.
தீபாவளியை முன்னிட்டு நிறுத்தப்பட்டுள்ள வேல் யாத்திரை நவம்பர் 17 முதல் தொடரும் என்றும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதி முடிவடையும் என்றும் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் எல். முருகன். வேல் யாத்திரையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல் யாத்திரை
சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள் நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசனுக்கு நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது.
அமைதியும் சாந்தமும்
மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற
பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ் நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்த மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவுகொள் என்பதாகும்.
இஸ்லாம், கிறிஸ்துவம்
அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்துவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதிகொள், சாந்தமடை என்பதாகும்.
அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும், அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும் அன்பையும் சாத்வீகத்தையும்தான்.
மதங்களில் பெயரால் ஊர்வலம்
இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாங்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.
ஒற்றுமை ஒருமைப்பாடு
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.