இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி! சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தனித் தீர்மானம்!
சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அண்டை நாடான இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என உதவ தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன
மேலும் எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

இலங்கை நெருக்கடி
கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகைக்கு எதிரே முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று பதினேழாவது நாளை எட்டியது. இதனிடையே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நிதி உதவிக்காக இலங்கை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்தியா உதவி
நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு வேளை உணவுக்குக் கூட அல்லல்படும் இலங்கை மக்கள் தற்போது குடும்பம் குடும்பமாக தமிழகத்தை நாடி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனியடுத்து இந்தியா சார்பில் இலங்கைக்கு டீசல் மற்றும் அரிசி அனுப்பப்பட்டது.

தமிழக அரசு கோரிக்கை
தற்போது இலங்கைக்கு சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப போதிய வசதி செய்து தருமாறு கோரி இருந்தார்.

சிறப்பு தீர்மானம்
ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித பதிலோ, அனுமதியோ அளிக்காத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தீர்மானத்தில் வலியுறுத்தப்படுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்," இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்" என பேசினார்.

தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கைக்கு உதவிட அனுமதி கோரிய தீர்மானம் குறித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேசிய நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications