அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்.. பெயரும் மாற்றப்பட்டு ட்வீட் வெளியீடு!
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயரும் மாற்றப்பட்டு அதில் கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளில் படு ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக ட்விட்டரில் இவர் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் மின்சாரத்துறை தொடர்பான அல்லது அது சம்பந்தமான ட்வீட் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு வெளியானது.

ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பம்
அதில், ''அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கவுண்டில் இருந்து இப்படி திடீரென இப்படியொரு பதிவு வந்திருக்கிறதே என்று பலரும் யோசித்துக்கொண்டிருந்தனர்.

அடுத்தடுத்து பதிவுகள் வெளியீடு
இந்த நிலையில் சிறிது நேரத்தில் அடுத்து ஒரு டிவிட் பதிவு வெளியானது. அதில், ''கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!'' என்று இருந்தது. மேலும் கிரிப்டோ முகவரி என ஒன்று பதிவிட்டு இருந்தது. இதேபோல் அவரது டிவிட்டர் பக்கத்தில் உள்ள அவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. அதனை Variorius (@V_Senthilbalaji) என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் அவரது அக்கவுண்ட் பக்கத்தில் ஏற்கனவே இருந்த மின்சாரத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் போன்ற பெயர்களையும் ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர்.

ஹேக் செய்யப்பட்டது உறுதி
செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு பெயரும் மாற்றப்பட்டு இருந்ததால் அது ஹேக் செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் இணையதள பக்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஹேக் செய்யப்பட்ட பிறகு ''பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள், பிரதமரின் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருந்தனர்'' சிறிது நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட்ட அக்கவுண்ட் மீட்கப்பட்டது. பிரபலமான அரசியல் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து பிட்காயின் சம்பந்தப்பட்டவர்கள் ஹேக்கிங் செய்து வருவது அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்ய ட்விட்டர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் நெட்டிசன்கள் விவாதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications