ட்விஸ்ட்.. சென்னைக்கு அருகில் வந்த தாழ்வு பகுதி.. இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழக்கிறது. இந்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் முன்பே வலிமை இழந்து காணாமல் போவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.
வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அதன்பின் இந்த தாழ்வு பகுதி மிக மிக மெதுவாக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இந்த தாழ்வு பகுதிக்கு எதிரான சூழ்நிலைதான் வங்கக்கடலில் நிலவி வந்தது. இதன் காரணமாக தாழ்வு பகுதி வலிமை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்னும் ஆறே மணி நேரம்தான்! பட்டென வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை மையம்
சிக்கல் ஏன்?
வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் ஆந்திரா மற்றும் சென்னை கடலோர பகுதிகளில் வறண்ட காற்று நிலவி வந்தது. இந்த வறண்ட காற்று தாழ்வு பகுதி பலம் பெறுவதை தடுத்தது. தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதை தடுத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் அருகில் இருந்த மற்ற சுழற்சிகளும் இது வலிமை பெறுவதை தடுத்தது. அதாவது அருகில் இருந்த சுழற்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த தாழ்வு பகுதியில் இருந்து காற்றை அபகரித்தது. இதன் காரணமாக தாழ்வு மண்டலம் உருவாவது தாமதம் ஆனது. அப்படியே உருவான தாழ்வு மண்டலமும் பெரிதாக வலிமை இல்லாத தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு நாட்கள் முன்பு தாழ்வு மண்டலமாக மாறியது.
என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் ஒரு வழியாக இந்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் உருவானது. ஆனால் அதன்பின் இந்த தாழ்வு மண்டலம் நகர்வதால் சிக்கல் இருந்தது. வறண்ட காற்று காரணமாக இது மிக மிக மெதுவாக நகர்ந்தது. அதன்பின்பாக நேற்று சென்னைக்கு அருகே 150 கிமீ தூரம் வரை வந்து வங்கக்கடலில் மையம் கொண்டது. சென்னைக்கு மிக அருகில் இந்த தாழ்வு மண்டலம் வந்தது. அதன்பின் இந்த தாழ்வு மண்டலம் பெரிதாக நகரவில்லை. நேற்று இரவோடு இரவாக இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 40 கிமீ தூரத்தில் வந்து நின்றது. இதனால் சென்னையில் நேற்று இரவு லேசாக மழை பெய்தது.
சென்னை
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை இழந்தது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அதன்பின் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவி வந்த இது தற்போது சென்னைக்கு மிக அருகில் வந்துள்ளது. இன்று இது மேலும் வலிமை இழந்து, தாழ்வு பகுதியாக மாறுகிறது. இதனால் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடசென்னை
நேற்று இரவு வடசென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு மிக அருகில் வந்த காரணத்தால் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே வலிமை குறைந்துவிட்டது,. அது இன்று மேலும் வலிமை குறையும். முற்றிலுமாக மறையும் முன் இந்த தாழ்வு பகுதி லேசான மழையை சென்னைக்கு கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வு பகுதி கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
நாளை
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.